ஐஸ்வர்யா சாவுக்கு நான் காரணமில்லை… விஷக்கிருமிகளின் சதி: யுவராஜா

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த விளக்கம்:
"காஞ்சீபுரம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஐஸ்வர்யா மரணம் அடைந்ததற்கு என்னை தொடர்பு படுத்தி கூறுவது 200 சதவீதம் பொய்யானது. கட்சியில் உள்ள சில விஷக் கிருமிகள் என்னை பழிவாங்கி விட்டனர்".
"நேற்று இரவு 11 மணியளவில் இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் ராஜீவ் சத்தோ இமெயில் மூலம் என்னை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருப்பதாக தகவல் அனுப்பி உள்ளார்.பதவி நீக்கத்துக்கு எந்த காரணமும் கூறவில்லை.
இன்று வரை என் மீதோ, எனது நடவடிக்கைகளின் மீதோ யாரும் குறை சொன்னதில்லை. மனசாட்சிப்படி கடந்த 3 1/2 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து, கட்சியின் வளர்ச்சிக்காக நேர்மையுடன் பணியாற்றி உள்ளேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் என்னை பதவி நீக்கம் செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஐஸ்வர்யா மரணம் அடைந்ததற்கு என்னை தொடர்புபடுத்தி கூறுவது 200 சதவீதம் பொய்யானது. அவரது பெற்றோர் தரப்பிலும் சரி, உறவினர்கள் தரப்பிலும் சரி எந்த குறையும் கூறவில்லை.
அவரது மரணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது மரணத்தோடு என்னை தொடர்புபடுத்தி பேசினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வேன்.
சோனியா, ராகுல்காந்தியை சந்திப்பேன்
இன்னும் ஓரிரு நாட்களில் சோனியாவையும், ராகுல் காந்தியையும் நேரில் சந்தித்து என் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்வேன். நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்.
ஜனநாயக முறைப்படி இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் இந்திய அளவில் 2-வது முறையாக அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நான் மட்டும்தான். எனது வெற்றியை பொறுக்க முடியாமல் கட்சியில் சில விஷக் கிருமிகள் மூலம் கடந்த 6 மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தேன்.
எனக்கான நியாயம்
கட்சி மேலிடம் என்னை விசாரணைக்கு அழைத்தது. ஆனால் என்னிடம் விசாரணை நடத்திய போது என் தரப்பு நியாயங்களை அவர்கள் கேட்கவில்லை.
அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரங்களுடன் தான் நான் டெல்லி சென்றிருந்தேன். என்னிடம் ராஜீவ் சத்தோவும், மீனாட்சி நடராஜனும் 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார்கள். என் தரப்பு விளக்கங்களை கேட்கவே இல்லை.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா மரணத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மீனாட்சி நடராஜன் என்னிடம் தெரிவித்தார்.
என்னை பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் படி கூறினார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். என் மீது குற்றம் இருந்தால் நிரூபியுங்கள். எந்த தவறும் செய்யாத நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எனது முடிவை உறுதியாக தெரிவித்து விட்டேன். முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்கவும் இல்லை. நியாயம் கேட்கவும் இல்லை. ஒருதலைப் பட்சமாக முடிவு எடுத்துள்ளார்கள்.
நியாயமும் உண்மையும் ஒரு நாள் வெளிவரும். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார் யுவராஜ்.












Click it and Unblock the Notifications