விடாது கறுப்பு... தூசு தட்டப்படும் திமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான சொத்து குவிப்பு வழக்கு
சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து 6 ஆண்டுகால தாமதத்துக்குப் பிறகு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.
தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சொத்து 5 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தற்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்ய அனுமதி பெற்றிருக்கிறது.
துரைமுருகன்
வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மனுவில், 1996-2001ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.94 கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து 23.2.07 அன்று வேலூர் தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அப்போது மேல்முறையீடு செய்வதற்கு அரசின் அனுமதி கேட்டோம். ஆனால் மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கு அல்ல என்று அப்போதைய அரசு கூறிவிட்டது. தற்போது அரசின் ஒப்புதல் பெற்றுள்ளோம். மேல்முறையீடு செய்ய 1,784 நாட்கள் காலதாமதம் ஆனதை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்க கோரப்பட்டது.
வீரபாண்டி ஆறுமுகம்
இதுபோல் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மனுவில், 1996-01-ம் ஆண்டுகளில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.80 கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தலைமை மாஜிஸ்திரேட்டு விடுவித்து 6.11.06 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1,896 நாட்கள் காலதாமதம் ஆனதை மன்னித்து மேல்முறையீட்டு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மனுவில், 1996-01 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.21.22 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடலூர் தலைமை மாஜிஸ்திரேட்டு விடுவித்து 22.7.07 அன்று உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1,752 நாட்கள் காலதாமதம் ஆனதால் அதை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மூன்று மனுக்களையும் ஏற்றுக்கொண்டு, காலதாமதத்தை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.