விவேகானந்தரின் மன உறுதி எத்தகையது: ஜெயலலிதா சொன்ன உண்மை சம்பவம்
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டனுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் இயற்கை எழில் மிகுந்த நண்பரின் பண்ணை வீட்டில் தங்கினார். அங்கு ஏராளமான மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. ஒரு நாள் மாலை வேளையில் விவேகானந்தர் பண்ணை மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரின் நண்பரும், அவரது மனைவியும் சென்றனர். அப்போது திடீர் என்று ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. மாட்டின் சீற்றத்தைப் பார்த்த நண்பரின் மனைவி மயங்கிவிட்டார்.
விவேகானந்தரின் நண்பர் மயங்கி விழுந்த தனது மனைவியை தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்கோ கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் இங்கிருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக வேண்டும் என்று அஞ்சிய நண்பர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் விவோகானந்தர் அந்த இடத்தில் அப்படியே நின்றுவிட்டார். ஓடி வந்த மாடு விவேகானந்தரையும், மயங்கிக் கிடந்த நண்பரின் மனைவியையும் ஒன்றும் செய்யவில்லை. ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. மாடு தன்னைத் தான் துரத்துகிறது என்பதை உணர்ந்த அந்த நண்பர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினார். மாடும் அவரை விடாமல் துரத்தியது. இதையடுத்து அவர் சட்டென்று ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து உயிர் தப்பினார்.
அதன் பிறகு பண்ணை ஊழியர்கள் மாட்டை பிடித்து கட்டிப் போட்டனர். மாட்டை கட்டிப் போட்ட பிறகு தான் விவேகானந்தர் அந்த இடத்தை விட்டே நகர்ந்தார். அப்போது அவரது நண்பர் அங்கு வந்தார். அவருக்கோ ஒரே ஆச்சரியம். அந்த நேரத்தில் நண்பரின் மனைவிக்கு மயக்கம் தெளிந்து எழுந்தார். ஆபத்தான் நேரத்தில் கூட துளி பயம் இல்லாமல் எப்படி உங்களால் உறுதியாக நிற்க முடிந்தது என்று நண்பர் விவேகானந்தரிடம் கேட்டார்.
அதை கேட்டு புன்னகைத்த விவேகானந்தர், நான் ஒன்றும் எதையும் வித்தியாசமாக செய்யவில்லை. வருவது வரட்டும் என்ற மன உறுதியோடு நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்துவது மிருகங்களின் குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு ஓடிக் கொண்டிருந்த உங்களை துரத்தியது என்றார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட அஞ்சி ஓடாமல் வருவது வரட்டும் சந்திக்கலாம் என்ற மன உறுதியோடு வாழ்நாள் முழுவதும் விளங்கியவர் சுவாமி விவேகானந்தர் என்றார்.