தூத்துக்குடி மீனவர்களை விடுவித்த கையோடு ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 652 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சூசை அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான படகில் ரெய்மன், முத்து, முருகானந்தம், தாசன், பிலிப் ஆகியோரும், சேவியருக்கு சொந்தமான படகில் சுடலை, அந்தோணி, இன்னாசி, லேடன், தவிதம் ஆகியோரும், ராசுவுக்கு சொந்தமான படகில் சுமன், ஆரோக்கியசாமி, முனியசாமி, கெபிசன் ஆகியோரும் பூண்டி என்பவரின் படகில் சுரேஷ், ராபின், முருகன், கேவி ஆகியோரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு இலங்கை கடற்படையினர் அங்கு வந்து அந்த 4 படகுகளையும் சுற்றி வளைத்தனர். அவர்கள் எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி 19 பேரையும் படகுகளோடு சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவரம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ராமேஸ்வரம் மீன்துறைக்கு தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் தான் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.