ஹஜ் யாத்திரை.. இந்த ஆண்டு 1.7 லட்சம் இந்தியர்களுக்கு சவூதி அனுமதி
டெல்லி: ஹஜ் புனித யாத்திரைக்கு இந்த ஆண்டு 1.7 லட்சம் இந்தியர்களுக்கு சவூதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் மேலும் 10,000 பேருக்கு அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான அனுமதி தொடர்பான பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் வெளியுறவதுத்துறை இணை அமைச்சர் இ.அகமது கலந்து கொண்டார். அவர் சவூதி அரேபிய அமைச்சர் பின் முகம்மது அல் ஹஜ்ஜாரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது இதுதொடர்பான உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயும் வருடாந்திர ஹஜ் யாத்திரை ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது கூடுதலாக 10,000 பேருக்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து சவூதி தரப்பில் உத்தரவாதம் தரப்படவில்லை.
அகமதுவுடன், சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் ஹமீத் அலி ராவ், இந்தியத் துணைத் தூதர் பைஸ் அகமது கித்வாய் ஆகியோரும் உடன் இருந்தனர்.