3 குழந்தைகளின் தாய்… குடும்பத்தைக் காக்க சுமை தூக்கும் சோகம்
வடமேற்கு ரயில்வேயில் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்தவர் மகாதேவ். இவருக்கு மஞ்சு தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மகாதேவ் உடல் நலக் குறைவால் திடீரென மரணமடைந்துவிட்டார். கணவரின் இறப்புக்குப் பின்னர் பிழைப்புக்கு என்ன செய்வது என தெரியாமல் விழித்திருக்கிறார் மஞ்சு.
கணவர் பார்த்த போர்ட்டர் வேலையை தான் பார்க்கலாம் என்ற தோன்றவே, அதிகாரிகளைப் போய் பார்த்திருக்கிறார். தனது நிலைமையை சொல்லி கணவன் பார்த்த வேலையை தனக்கு கொடுக்கும்படி கேட்டார். அதிகாரிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார் மஞ்சு தேவி.
ராஜஸ்தானின் ஒரே பெண் போர்ட்டர் என்பதால் பிரபலமாகி வருகிறார் மஞ்சு தேவி. ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளும் பெண் போர்ட்டரை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்துப் போய், அதன்பிறகு அவரிடம் தங்கள் பைகளை தூக்கிக் கொண்டு வரும் வேலையைத் தருகிறார்கள்.
இந்த பணி பற்றி கூறும் மஞ்சு தேவி, கணவர் திடீரென இறந்து விட்டார். எனக்கு படிப்பறிவு கிடையாது. அதனால் கணவன் செய்த போர்ட்டர் வேலையை செய்ய முடிவு செய்தேன். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் எனக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. கணவரின் நண்பர்கள்தான் அந்த யோசனையை சொன்னார்கள். அவர்களே அதற்கு ஏற்பாடும் செய்தார்கள் என்றார்.
3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்த ரயில்வே அதிகாரிகளும் எனது கணவனின் போர்ட்டர் லைசன்ஸை எனக்கு கொடுத்தார்கள். இந்த தொழிலில் ஆண்கள்தான் அதிகம். நான் ஒருத்திதான் பெண். இருந்தாலும் சக போர்ட்டர்கள் உதவியால் வேலை கஷ்டம் தெரியவில்லை எனக் கூறுகிறார் மஞ்சு.