இலங்கை விவகாரம்: திமுகவுடன் ஆலோசிப்போம்.. சல்மான் குர்ஷித்- மேலும் பணிகிறது மத்திய அரசு!
முதலில் இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்றார் குர்ஷித், இலங்கை நமது நட்பு நாடு என்றார், இதன் மூலம் தமிழர்கள் ஏதோ நாட்டின் எதிரிகள் என்பது மாதிரி பேசினார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது தனது நெருக்குதலை திமுக தலைவர் கருணாநிதி ஆரம்பித்தார். முதலில் பொத்தம் பொதுவாக இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார், பின்னர் இந்தியா ஆதரித்தே ஆக வேண்டும் என்றார். இதற்கு மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இதையடுத்து கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று பேச்சை ஆரம்பித்தார். அடுத்தடுத்து 3 நாட்களாக எச்சரிக்கையின் தொனியை தீவிரமாக்கிக் கொண்டே வருகிறார். இதையடுத்து மத்திய அரசின் நம்பர் டூ அமைச்சரான ஏ.கே.ஆண்டனி, நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் பார்வையாளரும், கருணாநிதியுடன் நல்ல உறவில் இருப்பவருமான மத்திய குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 3 மத்திய அமைச்சர்களை தமிழகத்துக்கு இன்று அனுப்பி வைக்கவுள்ளார் சோனியா காந்தி. இதில் ராகுல் காந்தியின் பங்கும் அதிகம் என்கிறார்கள்.
இந் நிலையில் சல்மான் குர்ஷிதும் பலே பல்டிகளை அடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது குறித்து இந்த மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும். அதற்கு முன்னதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். முக்கியமாக திமுகவுடன் ஆலோசனை நடைபெறும் என்றார்.
இந்த விவகாரத்தில் சல்மான் குர்ஷித் பெயருக்குத் தான் அமைச்சரே தவிர, இலங்கை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பது காங்கிரஸ் தலைமை தான் என்பதும், இந்தியாவின் ரா அமைப்பும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஜ் யாத்திரை விஷயம் பற்றி பேசிய குர்ஷித், முதல் முறையாக செல்பவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். அதே நேரத்தில் ஹஜ் பயணம் செல்ல விரும்பும் அனைவருக்கும் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையானால் இதற்காக கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படும் என்றார்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக கேட்டபோது, "அங்கு தேர்தல் நடைபெற இருப்பதால் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கலாம்' என்றார்.
அப்சல் குருவை தூக்கிலிட்டதால் முஸ்லிம்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிரான மனப்பான்மை ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அதெல்லாம் இல்லை. முஸ்லீம்கள் தங்கள் நலனில் அதிகபட்ச அக்கறை செலுத்துவோர் பக்கம் இணைய வேண்டும் என்றார்.