மோடிக்கு புதுப் பதவி - பாஜக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரானார்! - அமீத் ஷாவுக்கும் பதவி
பாஜகவின் புதிய தலைவராக சமீபத்தில் ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றார். இதையடுத்து புதிய நிர்வாகிகளை சிங் அறிவித்துள்ளார்.
மோடிக்கு இதில் முக்கியப் பதவி கிடைத்துள்ளது. அதாவது கட்சியின் 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவான ஆட்சிமன்றக் குழுவில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
11 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே முதல்வர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இப்பொறுப்புக்கு வந்துள்ளார்.
வருண் காந்தி பொதுச் செயலாளரானார்
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில் அவரது சித்தி மகன் வருண் காந்திக்கு பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளது பாஜக.
உமாபாரதி, சதானந்த கெளடா துணைத் தலைவர்கள்
அதேபோல முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா, உமாபாரதி, முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட 12 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் அணித் தலைவியானார் சரோஜ் பாண்டே
அதேபோல தேசிய மகளிர் அணித் தலைவியாக சரோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் நடிகை ஸ்மிரிதி இராணி இருந்து வந்தார். அவர் தற்போது கட்சதியின் துணைத் தலைவியாகியுள்ளார். இவர் தவிர சி.பி.தாக்கூர், ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர்ம் பொதுச் செயலாளராகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சின்ஹாவுக்கு இடமில்லை
முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை.
தமிழிசை செளந்தரராஜன் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் குழு தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம்
19 பேர் கொண்ட தேர்தல் குழுவையும் பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன் தலைவராக ராஜ்நாத் சிங் இருப்பார். இக்குழுவில் வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.