அடிக்கடி கிளம்பும் த.மா.கா. பரபரப்பு- பின்னணியில் ஜி.கே. வாசனின் ராஜ்யசபா சீட் பேரம்?!
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் வாசனின் எம்.பி. பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 5 எம்.எல்.ஏக்கள்தான் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்றனர். காங்கிரசுடன் தற்போது எந்த கூட்டணிக் கட்சியும் இல்லை. இதனால் சோனியாவின் ஆலோசகரான அகமது படேல் மூலமாக வேறு ஒரு மாநிலத்திலிருந்து தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைக் கோரியிருக்கிறார் வாசன். மணிசங்கர் அய்யருக்கு இதேபோல் சீட் கொடுக்கப்பட்டிருப்பதையும் வாசன் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் அண்மைக் காலமாக வாசன் மீது கடுப்பில் இருக்கும் ராகுல் காந்தியோ, எம்.பியாக வேண்டுமெனில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.
ராகுல் இப்படிச் சொல்லியிருப்பதால் அவரை பணியவைக்கும் அஸ்திரமாகத்தான் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயமாகப் போகிறது என்ற தகவல் கிளப்பிவிடப்படுவதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் உருவாக்கி வெற்றிகரமாக நடத்த முடியாது என்கிற எண்ணமும் ஜி.கே. வாசனுக்கு இருக்கிறதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் முதல் கட்டமாக த.மா. கா என்ற அஸ்திரத்தை அவ்வப்போது கிளப்பிக் கொண்டே அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதும் வாசனின் திட்டமாக சொல்லப்படுகிறது