'எப்போ கல்யாணம், எப்போ பிரதமர் ஆவீங்க'... இந்த கேள்வியெல்லாம் தேவையா?: ராகுல் காந்தி
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
எப்பொழுது நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? எப்பொழுது பிரதமர் ஆவீர்கள்? என்று என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தேவையில்லாதவை. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் முனைவோர் பெரும் உதவி செய்துள்ளனர். இந்தியாவில் கனவுகள், ஐடியாக்களுக்கு பஞ்சமே இல்லை. இந்திய இளைஞர்களின் உத்வேகத்தை நாம் தான் நல்ல வழியில் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறந்த கட்டமைப்பு தேவை. சிறந்த உள்கட்டமைப்பை அமைக்க கார்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.
வளர்ச்சிக்கு அரசு மற்றும் தனியார் துறைகளின் கூட்டணி மிகவும் முக்கியம். இங்கு வேலையின்மை பிரச்சனை இல்லை. முறையான பயிற்சி இல்லாதது தான் பிரச்சனை. வளர்ச்சிப் பாதையில் குண்டும் குழியும் இருக்கக் கூடாது. வளர்ச்சியில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நான் 1991ல் கல்லூரிக்கு சென்றபோது இந்திய தெருக்களில் யானைகள் நடந்து செல்லுமாமே என்று என்னிடம் கேட்டனர். ஆனால் தற்போது யாரும் அது போல் கேட்பதில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது என்றார்.