'அட்டாக்'கையும் பிடிக்க முடியலை, ராமஜெயம் கொலையாளிகளின் நிழலையும் தொட முடியலை...!
மதுரை: மதுரையில் பொட்டு சுரேஷை கொடூரமாகக் கொன்ற கும்பலை ஏவிய அட்டாக் பாண்டியைப் பிடிக்க முடியாமல் மதுரை போலீஸார் திணறி வருகின்றனர். மறுபக்கம், முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தைக் கொலை செய்தவர்கள் யார் என்பதே இதுவரை சுத்தமாக தெரியவில்லை.
தமிழகத்தை உலுக்கிய இந்த இரு பெரும் கொலைச் சம்பவத்தில் இதுவரை முக்கியக் குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பது காவல்துறையின் செயல்பாடு குறித்து சந்தேகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொட்டு சுரேஷ் கொலையிலாவது சிலர் சரணடைந்தனர், சிலர் பிடிபட்டனர். ஆனால் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை ஒருவர் கூட பிடிபடவில்லை. கொலையாளிகளின் நிழலைக் கூட தொட முடியாமல் தவிக்கிறார்கள் போலீஸார்.
ஒரு வருடத்தை முடித்த ராமஜெயம் கொலை
கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ராமஜெயம் திருச்சி அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வாக்கிங் போனபோது அவரை கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியானது.
7 தனிப்படைகள் - ஒரு புண்ணியமும் இல்லை
ராமஜெயம் கொலையில் பல குழப்பங்கள் ஆரம்பத்திலிருந்தே படையெடுத்துக் கிளம்பின. கொலை வழக்கை விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஒரு புண்ணியமும் இல்லை.
தனிப்படைகள் கலைப்பு
கொலை நடந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் துப்பு துலங்காததால் 7 தனிப்படைகளில் சிலவற்றைக் கலைத்து உத்தரவிட்டார் திருச்சி மாநகர கால்துறை ஆணையர் அமல்ராஜ்.
வழக்கு சிபிசிஐடி வசம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் போனது. அங்கு போயும் கூட இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
மதுரையில் போட்டுத் தள்ளப்பட்ட பொட்டு சுரேஷ்
மதுரை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி இரவு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
சுரேஷ் கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படை
சுரேஷ் கொலை வழக்கில் கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தார் கமிஷனர் சஞ்சய் மாத்தூர்.
கொலையாளி அடையாளம் தெரிந்தது
முதல் கட்ட விசாரணையில் சுரேஷை போட்டுத் தள்ளியது அட்டாக் பாண்டி கும்பல்தான் என்று தெரிய வந்தது.
வலைவீச்சு- 16 பேர் அடுத்தடுத்து சரண்
இதையடுத்து அட்டாக் பாண்டியைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கையை முடுக்கி விட்டனர். ஆனால் அவர் சிக்கவில்லை. ஆனால் அவரது அட்வைஸின் பேரில் அவரது உறவினரான விஜயபாண்டி, கார்த்திக், பாண்டி, சந்தானம் உள்ளிட்ட 16 பேர் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
வாகனம் பிடிபட்டது, வெட்டியகத்தி சிக்கியது.. அட்டாக்கை காணோமே
கொலைக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், பொட்டு சுரேஷை வெட்டவும், தாக்கவும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கூட சிக்கின. ஆனால் கொலையை ஏவிய அட்டாக் பாண்டி மட்டும் பிடிபடவே இல்லை.
2 மாசத்துக்கு மேலாச்சு
பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டு 2 மாதங்களத் தாண்டி விட்டது. ஆனால் அட்டாக் குறித்து ஒரு தகவலும் இல்லை. அவரது நிழலைக் கூட நெருங்க முடியவில்லையாம்.
இருவருமே திமுக புள்ளிகள்
கொலையுண்ட ராமாஜெயமாகட்டும், அட்டாக் பாண்டியாகட்டும் இருவருமே திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.