மதுரை சித்திரைத் திருவிழா: 23ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இம்மாதம் 23-ல் நடை பெற இருக்கிறது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு கட்டண அனுமதிச் சீட்டுகள் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 3 நாள்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
முகூர்த்தம்:
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 23ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.17 மணி முதல் 8.41 மணிக்குள் நடைபெறுகிறது.
15ஆயிரம் பேர்:
மேல-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள புதுப்பிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் காண்பதற்கு சுமார் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இலவச அனுமதி:
முதன் முறையாக 6,500 பேர் அனுமதிக் கட்டணம் இன்றி இலவசமாக முன்னுரிமை வருகை அடிப்படையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த இலவச அனுமதியில் திருக்கோயிலுக்குள் வரவிரும்புவோர் தெற்குக் கோபுர வாசலில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
கட்டண அனுமதி:
ரூ.200, ரூ.500 உள்ளிட்ட கட்டண அனுமதிச் சீட்டைப்பெற விரும்புவோர் ஏப்ரல் 20 முதல் 23ஆம் தேதி வரை திருக்கோயில் அனைத்து கோபுர வாசல்களில் உள்ள விற்பனை இடங்களில் வாங்கிக் கொள்ளலாம்.
விழா ஏற்பாடு:
திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் ஆகியோர் செய்துள்ளனர்.
தகுந்த பாதுகாப்பு:
3,500 போலீஸார் பாதுகாப்பு: திருவிழாவை முன்னிட்டு தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, திருக்கோயில் நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து காவல் துறை பாதுகாப்பை மேற்கொள்ளவுள்ளது.
அத்துடன் ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படைப் பிரிவு மாணவ, மாணவியர் ஆகியோரையும் திருவிழா பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மாநகர் போலீஸார் 2,500 பேருடன், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த போலீஸாரும், பட்டாலியன் பிரிவினரும் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுகின்றனர். மொத்தம் 3,500 போலீஸார் திருவிழா பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.