சிக்கன நடவடிக்கை: 5% சம்பளத்தை திருப்பிக் கொடுக்கும் ஒபாமா
டீக்கடை தொடங்கி ஊடகங்கள் வரை பேசும் ஒரு முக்கியமான விசயம் பொருளாதார மந்தநிலை. இந்த மந்தநிலையை சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று ஆள்பவர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க அமெரிக்க அதிபர் அதற்கான ஏற்பாட்டினை தொடங்கியுள்ளாராம்.
சிக்கன நடவடிக்கையாக அதிபர் ஒபாமா தனது ஆண்டு சம்பளத்தில் 5 சதவீதத்தை அரசுக்குத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஆண்டு சம்பளம் 2 கோடி ரூபாய் என்ற நிலையில், அதில் 5 சதவீதம், அதாவது 10 லட்ச ரூபாயை கருவூலத்துக்கு திருப்பித் தரும் ஒப்பந்தத்தில் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று, அதிபரின் சம்பளம் நிர்ணயிக்கப்படுவதுடன், அது சட்டமாகவும் இயற்றப்படுவதால், அதை மாற்ற இயலாது.
எனவே, சம்பளமாக அதிபர் ஒபாமாவின் கணக்கில் 2 கோடி ரூபாய் வரவு வைத்த பிறகு, 10 லட்ச ரூபாயை மீண்டும் அரசுக் கணக்கில் செலுத்தி விடும்படி தனது அலுவலக ஊழியர்களுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை வாஷிங்டனில் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவை ஆள்பவர்கள் செய்வார்களா?
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை பல லட்சம் ரூபாய் ஆண்டிற்கு சம்பளமாக பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சதவிகித சம்பளத்தை திருப்பிக் கொடுத்தால் இந்தியாவின் கஜானா நிரம்பி வழியும் என்கின்றனர்.
சம்பளத்தை திருப்பித் தராவிட்டாலும் கூட தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டாலே அரசுக்கு பெருமளவு மிச்சமாகும் என்கின்றனர் திருவாளர் பொதுஜனங்கள்.