'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை
சென்னை: தலப்பாக்கட்டி என்ற பெயரை தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸ் உணவகங்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறி அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம் சென்னை ராவுத்தர் தலப்பாக்கட்டு பிரியாணி உணவகங்களின் மனுவை தள்ளுபடி செய்தது.
தலப்பாக்கட்டு பிரியாணி உருவான கதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 1957ம் ஆண்டு நாகசாமி நாயுடு திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டலை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு தெரிந்திருக்காது தனது ஹோட்டல் பெயருக்கு மவுசு இருக்கும் என்று. பாரதியாரின் ரசிகரான நாயுடு எப்பொழுதும் தலையில் தலைப்பாகை கட்டியிருப்பார்.
ஆனந்த விலாஸ் தலப்பாக்கட்டியானது
நாயுடு எப்பொழுதும் தலைப்பாகை கட்டியிருந்ததால் வாடிக்கையாளர்கள் கடையின் அடையாளமாக தலப்பாக்கட்டி பிரியாணி கடை என்றனர். இந்த பெயர் பிரபலமாகவே 1978ம் ஆண்டில் அவர் மறைவுக்கு பிறகு ஹோட்டலுக்கு தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றம் 2006ம் ஆண்டு வரை எந்த பிரச்சனையும் இன்றி இருந்தது.
தலப்பாக்கட்டிக்கு வந்த பிரச்சனை
2006ம் ஆண்டில் சென்னை ராவுத்தர் தலப்பாக்கட்டு பிரியாணி மற்றும் ஃபாஸ்ட் புட் துவங்கப்பட்டது. இதையடுத்து ஆனந்த விலாஸ் தலப்பாக்கட்டு என்ற பெயர் பயன்பாட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தலப்பாக்கட்டு என்ற பெயரை சென்னை ராவுத்தர் உணவகங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸுக்கு தான்
2010ல் டிரேட்மார்க் பதிவகம் தலப்பாக்கட்டி என்ற பெயரை தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸுக்கு அளித்தது. மேலும் தலப்பாக்கட்டு என்ற பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்த சென்னை ராவுத்தரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் தோல்வியடைந்த சென்னை ராவுத்தர்
தலப்பாக்கட்டு பெயர் விவகாரம் குறித்து சென்னை ராவுத்தர் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடங்கிய பெஞ்ச் தலப்பாக்கட்டி பெயர் ஆனந்த விலாஸுக்கு தான் சொந்தம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இரண்டுமே வேறு வேறு
சென்னை ராவுத்தர் பிரியாணி பாஸ்மதி அரிசியிலும், ஆனந்த விலாஸ் பிரியாணி சீரகசம்பாவிலும் செய்யப்படுகிறது. மேலும் இரண்டு பேரும் பயன்படுத்தும் மசாலாக்களும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது.