நியூசிலாந்து கடற்கரையில் விமானத்தை தரையிறக்கிய பயிற்சி விமானி!
கிரைஸ்ட்சர்ச்: வானிலை மோசமானதையடுத்து விமானம் இயக்குவதில் பிரச்சனை ஏற்பட்டதால் அதை கடற்கரையில் தரை இறக்கினார் நியூசிலாந்து பயிற்சி விமானி ஒருவர்.
விமானம் இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 22 வயது இளைஞர் தெளபோ பகுதியில் இருந்து நேபியர் நோக்கி பைபர் ரக சிறிய விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது வானிலை திடீரென மோசமானது.
இதையடுத்து அந்த விமானத்தை ஈஸ்ட் கேப் பீச் பகுதியில் கடற்கரையிலேயே அவர் தரையிறக்கினார்.
இதில் அந்த விமானத்தில் சக்கரங்கள் மண்ணில் புதைந்து, விமானம் தலைகீழாக தூக்கி வீசப்பட்டது. ஆனாலும் விமானி தப்பிவிட்டார்.
விமானத்தின் கதவுகள் ஜாம் ஆகிவிட்டதையடுத்து, அதன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அவர் பத்திரமாக வெளியேறிவிட்டார்.
இந்த விபத்தில் விமானமும் அவ்வளவாக சேதமடையவில்லை, விமானியும் சிறிதும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.