ராஜஸ்தான் மசூதி இடிப்பு விவகாரம்- மத்திய அரசு, ஜிண்டால் எம்.பிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் 400 ஆண்டுகால பழமைவாய்ந்த மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கும் தொழிலதிபரும் காங்கிரஸ் எம்.பி.யுமான நவீன் ஜிண்டாலுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் ஜிண்டால் குழுமத்துக்கு சுரங்க தொழிலுக்காக லீஸுக்கு 2010ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த மசூதி ஒன்றும் இருந்திருக்கிறது. ஜிண்டால் குழுமத்துக்கு நிலம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மசூதி இடிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில், மசூதியை இடித்தது மட்டுமின்றி இஸ்லாமியரின் மயானாத்தையும் ஜிண்டால் குழுமம் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது. இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் மத்திய சுரங்கம், சுற்றுச் சூழல், சிறுபான்மை, உள்துறை அமைச்சகங்களுக்கும் ராஜஸ்தான் அரசு, ஜிண்டால் குழுமம், ஜெய்ப்பூர் வக்ப் வாரியம். தேசிய சிறுபான்மை கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.