திண்டுக்கல்லில் வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளியில் தீ விபத்து
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதட்டம் நிலவியது. பின் குளிர்சாதனத மிஷினில் ஏற்பட்ட மின்கசிவு தான் காரணம் என கண்டறியப்பட்ட பிறகு அமைதி திரும்பியது.
திண்டுக்கல் நீதிமன்றம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்திற்கு நேற்று மதியம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் பள்ளிக் கூடத்தில் குண்டு வெடிக்க போகிறது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலை யத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளிராஜா, இன்ஸ் பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்தனர். பள்ளி மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் வெடிகுண்டு மோப்பநாய் வர வழைக்கப்பட்டு பள்ளிக்கூட வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பள்ளிக்கூட வளாகம் முழுவதும் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்பட வில்லை.
வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தி என்று தெரியவரவே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே பள்ளிக் கூடத்தில் உள்ள கணினி அறையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அங்கு சென்று பார்த்த போது குளிர்சாதனை இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்க ஆரம்பித்தது தெரிய வந்தது. உடனடியாக சென்று மின்சார இணைப்பை துண்டித்தனர்.
ஆனால், அதற்குள் தீ மழமழவென பரவி, கணினிகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் புருசோத்தமன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த கணினி அறையில் மொத்தம் 25 கணினிகள் இருந்தன. அதில் 5க்கும் மேற்பட்ட கணினிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
ஏற்கனவே வெடிகுண்டு புரளியை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி கொண்டு இருந்தபோது, கணினி அறையில் தீப்பிடித்ததால் போலீசார் பதற்றம் அடைந்தனர். குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததை தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே பள்ளிக் கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து மிரட்டல் வந்தது தெரியவந்தது. அந்த எண்ணை ஆய்வு செய்ததில் அம்மையநாயக்கனூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் பெயரில் சிம்கார்டு வாங்கி இருப்பது தெரியவந்தது.
மேலும் செல்போன் செயல்பாட்டை வைத்து பார்த்த போது திண்டுக்கல் ஆர்.வி.நகரில் இருந்து பேசியதும் தெரியவந்தது. இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.