திமுகவில் பங்காளிச் சண்டை படு ஜோர்… ஸ்டாலின் கோஷ்டிக்கு மாறுகிறார் ‘ஆவின்’ மன்னன்?
மதுரை: அரசியலில் வாரிசு சண்டைகள் ஏற்படுவது சகஜம்தான் என்றாலும் திமுகவில் அது கொஞ்சம் அதிகம். கடந்த 20 ஆண்டுகாலமாகவே நீறு பூத்த நெருப்பாக இருந்த வாரிசு சண்டைகள் இப்போது வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. மதுரையில் உள்ள திமுக பிரமுகர்களான தளபதி, அட்டாக் பாண்டி வரிசையில் மன்னனும் அணி மாறத் தயாராகி வருவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.

அழகிரியின் பேச்சை கேட்காமல்...
வட மாவட்டங்கள் மு.க.ஸ்டாலின் வசம் இருந்தாலும் தென் மாவட்டங்கள் தன் கையில் இருக்கவேண்டும் என்பதற்காகவே தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பினை கேட்டு வாங்கினார் அழகிரி. ஆனால் தென் மண்டலம் மட்டுமல்ல மதுரையில் உள்ளவர்களே அழகிரியின் பேச்சினை கேட்காமல் ஸ்டாலின் கோஷ்டியாளர்களாக மாறிவருகின்றனர் என்பது வெளிச்சம்

பிறந்தநாள் பிரச்சனை...
அண்ணன் தம்பிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தொடங்கி செயற்குழு, பொதுக்குழுவில் கொடுக்கப்படும் மரியாதை வரை யார் பெரியவர் என்பதில்தான் பிரச்சினையே. அண்ணன்-தம்பி பிரச்சினையில் தலையிடாமல் இருந்த துரைமுருகனும் கூட இப்போது ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டார் என்கின்றனர் உடன்பிறப்புக்கள். மதுரையில் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் இது கண்கூடாக தெரியவந்ததாம்.

அழகிரிக்கு சமாதானம்
அதே சமயம் அழகிரியையும் பகைத்துக் கொள்ளாமல் வீட்டிற்குச் சென்று சமாதானம் செய்த துரைமுருகன்,கடைசியில் சிரிக்கவைத்துவிட்டே கிளம்பினாராம். அழகிரியோ, அவரைத் தன் காரிலேயே விமான நிலையம் அழைத்துப்போய் வழியனுப்பிவிட்டு வந்தார் என்கின்றனர்.

நோட்டீஸ்க்கு பதில்
இந்த நிலையில் ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தைப் புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் அனைவருக்கும் தலைமைக் கழகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
கட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு என்ன பதில் அனுப்புவது என்பதில் அழகிரி ஆதரவாளர்களிடம் இரு வேறு கருத்து உள்ளது. மிசா பாண்டியன் உள்ளிட்ட அழகிரியின் தீவிர விசுவாசிகளோ, ஸ்டாலின் தரப்பு ஆட்களை விமர்சித்து பதில் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆனால், அடக்கி வாசிக்கும் நிர்வாகிகளோ, 'காய்ச்சல், தலைவலி, தவிர்க்க முடியாத வெளியூர் பயணம்' என்று சாஃப்ட்டாகப் பதில் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆவின் மன்னனும் கூட இந்த சாஃப்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்கின்றனர்.

மனம் மாறக் காரணம்
மத்திய அமைச்சர் பதவியில் இருந்தவரை அழகிரியின் ஆதரவாளராக இருந்த மன்னன் இப்போது அழகிரி பதவியில் இல்லை என்பதால் மெதுவாக ஸ்டாலின் பக்கம் சாய ஆரம்பித்து விட்டாரோ என்று பேசத் தொடங்கியுள்ளனர் உடன் பிறப்புக்கள். ஏற்கனவே அட்டாக் பாண்டியும் அழகிரி கோஷ்டியில் இருந்து ஸ்டாலின் கோஷ்டிக்கு மாறியவர்தான். பொட்டு சுரேஷ் கொலை விசாரணையும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால் ஸ்டாலின் பக்கம் சாய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றே பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் மன்னன் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லையாம். மன்னன் மனம் மாறினால் அண்ணன் என்ன முடிவு எடுப்பார் என்று அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர் உடன் பிறப்புக்கள்.












Click it and Unblock the Notifications