தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைப் பிரிக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட்
பாட்னா: அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சகோதரிகளை பிரிக்க உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஏழை டீக்கடைக்காரரின் மகள்கள் சாபஹா, பாரா. இரட்டை சகோதரிகளான இவர்கள் பிறக்கும் போதே தலை ஒட்டிப் பிறந்தனர். தற்போது அவர்களுக்கு 17 வயதாகிறது.
தலை ஒட்டிய நிலையில் இருப்பதால் இருவருக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இருவரும் பருவ வயதை எட்டிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பார்க்க அவஸ்தைபடுவது போல் இருந்தாலும் இரட்டை சகோதரிகளுக்கு பழகிப்போய்விட்டது.
பெற்றோரும் சிரமமாக எடுத்துக் கொள்ளவில்லை. தலை ஒட்டிய நிலையில் அந்த சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மருத்துவ ரீதியாக கடும் சவாலாக இருந்து வருகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து பிரிக்கப்பட்டால் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சைக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரட்டை சகோதரிகளுக்கு மருத்துவ ரீதியாக உதவ உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சகோதரிக்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவையும், தினமும் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையும் பீகார் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிதி செலைவை பீகார் அரசு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் கோர்ட்டிலும் பெற்றோர் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்தனர். எனவே அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சகோதரிகளை பிரிக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.
இரட்டை சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதில் சிரமம் இருப்பதாலும், அவர்களது பெற்றோர் அதனை விரும்பாததாலும் இதில் கோர்ட்டில் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் இரட்டை சகோதரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இரட்டை சகோதரிகளின் உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சகோதரிகளின் உடல் 2 ஆக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்குதான் சிறுநீரகம் உள்ளது. மேலும், இருவரது மூளைக்கும் பொதுவான ஒரே ஒரு பெரிய ரத்தக் குழாய் மட்டுமே செல்கிறது. எனவே, இவர்களை பிரித்தால் ஒருவர் நிச்சயம் உயிரிழப்பார். அதே நேரத்தில், உயிர் பிழைப்பவரின் நிலைமையும் கவலைக்கிடமாகும். எனவே, அவர்களை தனியாக பிரிப்பது சரியல்ல. மேலும், இதற்கு அவர்களது பெற்றோரும், சகோதரரும் ஒப்புக் கொள்ளவில்லை.