ஷீரடியில் ரூ.110 கோடி செலவில் ‘பக்த நிவாஸ்’ தங்கும் விடுதி : சென்னை பக்தர் கட்டி கொடுத்தார்
மும்பை: ஷீரடியில் பக்தர்கள் வசதிக்காக ரூ.110 கோடியில் தங்கும் விடுதியை முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் திறந்து வைத்தார். இதை சென்னையை சேர்ந்த பக்தர் ரமணி கட்டி கொடுத்துள்ளார்.
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. ஷீரடியில் வீற்றிருக்கும் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
பக்த நிவாஸ்'...
ஷரடி சாய்பாபாவை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில் சென்னையை சேர்ந்த சாய்பாபா பக்தர் ரமணி நடத்தி வரும் சாய்பாபா அறக்கட்டளை மற்றும் ஷீரடி அறக்கட்டளை இணைந்து ரூ.110 கோடி செலவில் ‘பக்த நிவாஸ்' என்ற கட்டிடத்தை கட்டி வருகிறது.
1,536 அறைகள் ...
முதல் கட்டமாக 12 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,536 அறைகள் உள்ளன. இதில் 384 அறைகள் ஏர்கண்டிஷன் வசதியுடையது. மீதம் உள்ள ஆயிரத்து 152 அறைகள் ஏர்கண்டிஷன் இல்லாத சாதாரண அறைகள்.
திறப்பு விழா...
முதல் கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட ‘பக்த நிவாஸ்' ஓய்வு அறைகளுக்கான திறப்பு விழா மராத்தியர்களின் புத்தாண்டு தினமான நேற்று ஷீரடியில் நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கலந்துகொண்டு ‘பக்த நிவாஸ்' கட்டிடத்தை பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பாராட்டு பத்திரம்...
சென்னையை சேர்ந்த சாய்பாபா பக்தரான ரமணி என்பவருக்கு ‘பக்த நிவாஸ்' ஓய்வு அறைகள் கட்டுவதற்கு உதவி செய்ததற்காக பாராட்டு தெரிவித்து ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் பாராட்டு பத்திரத்தை வழங்கி கவுரவித்தார்.
வாடகை அறைகள்...
ஏர்கண்டிஷன் அறையில் 24 மணி நேரம் தங்குவதற்காக ரூ.900 கட்டணமாகவும், சாதாரண அறையில் 24 மணி நேரம் தங்குவதற்கு ரூ.500-ம் கட்டணமாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் வசூல்...
மராட்டியத்தில் வறட்சி நிலவும் மாவட்டங்களுக்கு தண்ணீர், உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யும் வகையில் வறட்சி நிவாரண நிதியாக ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் ரூ. 25 கோடிக்கான காசோலையை அறக்கட்டளை தலைவர் ஜெயந்த் குல்கர்னி முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானிடம் வழங்கினார்.