பாஸ்டன் குண்டுவெடிப்பு: சவூதி வாலிபரிடம் எஃப்.பி.ஐ. விசாரணை, அபார்ட்மென்ட்டில் சோதனை
பாஸ்டன்: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சவூதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று நடந்த மாரதான் போட்டி நிறைவடையும் இடமான கோப்லி பிளாசாவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே படுகாயம் அடைந்த சவூதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் பிரிக்ஹாம் அன்ட் உமன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் என்று கூறப்படுகிறது. மேலும் மாஸ், ரெவியரில் உள்ள அந்த நபரின் அபார்ட்மென்ட்டில் எஃப்.பி.ஐ. மற்றும் மாநில சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் எதுவும் சிக்கியதா என்று தெரியவில்லை.
மருத்துவமனையில் அந்த வாலிபரின் உடைகள் பரிசோதிக்கப்பட்டது. அவரிடம் நேரடியாக எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை என்றும் சம்பவம் நடந்த பகுதியில் என்ன செய்தீர்கள் என்பது போன்ற பொதுவான கேள்விகளே கேட்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
அந்த நபர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததற்கு அரை மைல் தூரத்தில் உள்ள பாஸ்டன் ப்ருடன்ஷியல் சென்டரில் நேற்று இரவு சாப்பிட்டுள்ளார். மேலும் மராதான் முடியும் இடமான கோப்லி பிளாசாவுக்கு போட்டியைக் காணச் சென்றுள்ளார். இதை அவரே அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
யாராவது இறந்துவிட்டார்களா என்று அவர் கேட்டுள்ளார். அவரது செயல்கள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்று சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒருவர் தெரிவித்தார்.