மீண்டும் கலவரம் வெடிக்குமோ... அதிர்ச்சியில் கோவை!!

திருமண மண்டபத்தில் மோதல்...
கடந்த 6ம் தேதி கோவை போத்தனூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சீட்டு விளையாடிவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து திருமண மண்டபத்துக்குள் நுழைந்த சிலர், அங்கு இருந்தவர்களை சரமாரியாகத் தாக்கி, மண்டபத்தில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர். இதுதொடர்பாக, 13 முஸ்லிம்களை கைது செய்தது போலீஸ்.
சிலை உடைப்பு...
இந் நிலையில் மறுநாள் குனியமுத்தூரில் ஆதி வீரமாகாளியம்மன் கோயில் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதைக் கண்டித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர் சாலை மறியல் நடத்தினர். 12ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அதேநாளில், மனிதநேய மக்கள் கட்சியினர் இரண்டுபேர் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டனர்.
அர்ஜூன் சம்பத் வீடு மீது பெட்ரோல் குண்டு...
இந்த சம்பவத்துக்கு மறுநாள், அதாவது ஏப்ரல் 13ம் தேதி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படவே கோவை மாநகரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்படவே, மாநகர காவல்துறையை உளவுத்துறை உஷார்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்யக் கோரி இன்று இந்து அமைப்புகள் பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
1997 அச்சம்..
1997ம் ஆண்டு நவம்பர் மாதம் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். அப்போதே டவுன்ஹால் பகுதியில் தீவைப்பு சம்பவங்கள், கலவரங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1998, பிப்ரவரி 14-ம் தேதி கோவைக்கு வந்த அத்வானிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது இதில் 58 பேர் பலியாகினர். இதேபோன்றதொரு மற்றொரு சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர் கோவை வாசிகள்.
கண்காணிப்பு தீவிரம்
உளவுத்துறையின் எச்சரிக்கை ஒருபுறம் இருக்க, பெங்களூரில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கோவையில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குனியமுத்தூர், மதுக்கரை, சுந்தராபுரம், போத்தனூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரியிலும் டென்ஷன்
இதனிடையே கடந்த ஒருவாரகாலமாக நீலகிரி மாவட்டம் உதகையிலும் இந்து- முஸ்லீம் இடையே நடைபெற்று வரும் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14ம் தேதி இரு பிரிவினரிடையே தொடங்கிய மோதல், கொலைவெறித் தாக்குதலில் முடிந்துள்ளது. இதில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், மற்றும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாவட்டங்களிலும் பந்த்
இந் நிலையில் நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பந்த் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
திட்டமிட்ட செயல்கள்..
அதேசமயம், இந்த சம்பவங்கள் எல்லாமே திட்டமிடப்பட்டதுதான் என்கின்றனர் இஸ்லாமிய அமைப்பினர். 1999 நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களைப் போல மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டுகின்றனர். சிலை உடைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு எதிலும் முஸ்லீம்களுக்கு தொடர்பு இல்லை என்கின்றனர் அவர்கள்.
காக்குமா காவல்துறை
எது எப்படியோ 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் படிப்படியாக மீண்டும் ஒரு அமைதிப் பூங்காவாக மாறிவருகிறது கோவை மாநகரம். ஆனால் அங்கு மதக்கலவரமோ, குண்டுவெடிப்பு சம்பவங்களோ நிகழாமல் காக்கவேண்டியது காவல்துறையின் கடமை.












Click it and Unblock the Notifications