நெல்லையில் அரசு பேருந்து ஏறி, இறங்கிய பிறகு உயிர் தப்பிய வாலிபர்
நெல்லை: நெல்லையில் வாகன நெருக்கடியால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பைக்குடன் பேருந்துக்கு அடியில் சிக்கிய வாலிபர் உயிர் தப்பினார்.
நெல்லை டவுனில் இருந்து பாளையங்கோட்டை செல்வதற்காக வாகன ஓட்டிகள் ஒரே சாலையை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஜங்ஷன், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, மார்க்கெட், பாளை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் பேருந்து, கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டில் வண்ணார்பேட்டையில் தெற்கு, வடக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. இருப்பினும் அதிக போ்க்குவரத்து இருப்பதால் நெருக்கடி குறையவில்லை. மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாளை ஊசி கோபுரம் அருகே பைக்கில் வந்த இன்ஜினியர் உள்பட 2 பேர் அரசு பேருந்து மோதி இறந்தனர். அதே போல் நேற்று வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சந்திப்பில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்த மணப்பாட்டை சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. பைக் மீது பேருந்து ஏறி, இறங்கியது. பிரபாகரன் லேசான காயத்துடன அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சர்வீஸ் ரோடு அமைத்தால் தான் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.