சிறுமி பலாத்காரம்… பொதுமக்கள் போராட்டத்தால் டெல்லியில் மீண்டும் 144 தடை உத்தரவு
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறை ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் பொதுமக்கள் போராடத் தொடங்கியுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15-ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். பின்னர் கடந்த 17-ஆம் தேதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு கீழ் இருந்த மற்றொரு வீட்டில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசில் புகார் கொடுத்த பெற்றோர்கள், சிறுமியை சிகிச்சைக்காக தயானந்த் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை அடுத்து சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியை சீரழித்த குற்றவாளி மனோஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவத்தில் உரிய நேரத்தில் கடமையை செய்யத் தவறிய டெல்லி போலீஸ் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, டெல்லியில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.