நிலக்கரி சுரங்க ஊழல்- சட்ட அமைச்சர் ராஜினாமா இல்லை: மன்மோகன்சிங் திட்டவட்டம்!!
பின்னணி
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடால் மத்திய அரசுக்கு ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது கணக்கு தணிக்கை துறையின் குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு விசாரணையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் அதில் திருத்தங்கள் மேற்கொண்டார் என்பது எதிர்க்கட்சிகளின் புகாராக இருந்தது. இதை முதலில் மத்திய அரசு மறுத்தது வந்தது. ஆனால் நேற்று சிபிஐ இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மத்திய சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கை பகிரப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.
பிரதமர் மறுப்பு
இதனால் பிரதமர் மன்மோகன்சிங், சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று, ஒருபோதும் சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் ராஜினாமா செய்ய மாட்டார். நிலக்கரி ஊழல் வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. நமது நாட்டின் நாடாளுமன்றம் முடங்கிக் கிடப்பது பற்றி உலக நாடுகள் சிரிக்கின்றன என்றார் அவர்.
அதிரடி சோதனை
இதனிடையே நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு பெற்றதாக 11 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சஞ்சய் ஜெயின் சகோதரர்களுக்கு சொந்தமான புஷ்ப் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த நிறுவனங்களில் சி.பி.ஐ. இன்று அதிரடி சோதனை நடத்தியது. டெல்லி, அரியானா மற்றும் ராயப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.