தர்மபுரி கலவரம்: உண்மை நிலை அறிய வாசுகி ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு- ஹைகோர்ட் உத்தரவு
தர்மபுரி கலவரத்தில் நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட மூன்று தலித் கிராமங்களில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் தொடர்பாக ஆய்வு செய்த அரசுக் குழுவின் பரிந்துரைகளையடுத்து ரூ. 8 கோடி அளவுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கியது.
ஆனால், இந்த உதவிகள் பாதிக்கப்பட்ட சரியான நபர்களுக்குச் சென்று சேரவில்லை என்றும், சம்பவம் நடந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அவர்களின் வாழ்க்கை இன்றும் பாதுகாப்பற்றதாகவே உள்ளதாகவும், இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பவில்லை என்றும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தவும் பாதிப்பின் அளவு மற்றும் உண்மை நிலை அறியவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்காக மூத்த ஐ,ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியலை அனுப்புமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ரவிச்சந்திர பாபு, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசு சமர்பித்தது.
அந்தப் பட்டியில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான வாசுகி தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்தக் குழுவுக்கு மாவட்ட அட்சியர், மற்றும் அரசு உதவ வேண்டும் என்றூம், இந்தக் குழு சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாக பயணம் செய்து மக்களைச் சந்தித்து பாதிப்பின் அளவு, சேதமடைந்த வீடுகள், சொத்துகள், இன்னும் அளிக்கப்பட வேண்டிய நிவாரண உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து, வரும் ஜூன் 21ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.