நிதாகத் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சவூதி அரசிடம் இந்தியக் குழு வலியுறுத்தல்
ரியாத்: சவூதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அதிக அளவில் வேலை இழக்க நேரிடும், எனவே, அந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் (நிதாகத் சட்டம்) விளைவாக இந்தியர்கள் அதிக அளவில் வேலை இழக்கும் வேதனையான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிதாகத் சட்டத்தின்படி, சவூதியில் உள்ள நிறுவனங்கள் 10 வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், உள்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இந்த புதிய சட்டம் காரணமாக ஏற்கெனவே அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்.
இவ்விஷயமாக, வெளிநாடுவாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி தலைமையிலான குழுவினர் சவூதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அகமது மற்றும் பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அடல் ஃபகீயை சந்தித்துப் பேசினர். அப்போது, புதிய தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அதிக அளவில் வேலை இழக்க நேரிடும் என்றும், அந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சவூதியில் 20 லட்சம் இந்தியர்கள் உள்பட 90 லட்சம் வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் சுமார் 2 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications