மலேசிய தேர்தலில் ஆளும் கூட்டணி மீண்டும் வெற்றி.. அன்வர் இப்ராஹிம் கட்சி தோல்வி
நேற்றைய தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 1.3 கோடி வாக்காளர்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிக்கும், அன்வர் இப்ராஹிமின் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான மக்கள் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 222 இடங்களில் ஆளும் கூட்டணி 133 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பிரதமர் நஜீப் ரசாக் பேகான் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். ஆனால், அன்வர் இப்ராஹிமின் மக்கள் கூட்டணி தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது.
தொடர்ந்து 56 ஆண்டுகளாக மலேசியாவில் ஆட்சியில் உள்ள ஆளும் கூட்டணி கடந்த 2008ம் ஆண்டு தேர்தலில் 140 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இப்போது 133 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிம், அவரது மகள் நுருல்லிசா அன்வர் ஆகியோரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மலேசியாவிலேயே பொருளாதார ரீதியில் முக்கிய மாநிலமான பினாங்கையும் எதிர்க்கட்சிக் கூட்டணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிக் கூட்டணி மொத்தத்தில் 89 இடங்களில் வென்று தோல்வியைத் தழுவியது.
மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய கூட்டணி கட்சி கடந்த 56 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு தலைமையின் கீழ் உள்ள இந்த கூட்டணியில் மலேசிய சைனீஸ் சங்கம், மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
மலேசியாவில் சுமார் 17 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் சீனர்களின் கையில் தான் உள்ளது. அவர்களே தொழில்துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.