அஸ்ஸாம் எம்.பிக்களால் ராஜ்யசபாவில் பரபரப்பு - மசோதாவைப் பறிக்க முயற்சி
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று நில மாற்ற மசோதா மீது கடுமையாக வாதிட்ட அஸ்ஸாம் கன பரிஷத் கட்சி எம்.பிக்கள் மசோதாவைப் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமார் தீபக் தாஸ் மற்றும் பிரேந்திரா குமார் பைஷ்யா ஆகிய இரு எம்.பிக்களும் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை எதிர்த்து கோஷமிட்டபடி வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நெருங்கி அவர் கையில் வைத்திருந்த மசோதாவைப் பறித்து கிழிக்க முயன்றனர்.
இதனால் ராஜ்யசபாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக சல்மான் குர்ஷித், 2013ம் ஆண்டு 119வது அரசியல் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து பேசினார். இந்த மசோதாவானது, வங்கதேசத்துடனான நில மாற்றம் தொடர்பானதாகும்.
இந்த மசோதாவுக்கு அஸ்ஸாம் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கோஷமிட்டபடி எழுந்து கடுமையாக பேசினர். அமைச்சரிடமிருந்து மசோதாவை அவர்கள் பறிக்க முயன்றதைத் தொடர்ந்து அருகில் இருந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளே பாய்ந்து அதைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து பிற்பகலுக்கு சபை ஒத்திவைக்கபப்ட்டது.