காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தேதியை வெள்ளியன்று அறிவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பாக கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் மத்திய அரசுகளிடம் விளக்கம் கேட்டு கடந்த 22ம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கடந்த வாரம் பதிலளித்த கர்நாடக அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் போது பரிந்துரையாகச் சொல்லப்பட்டதே தவிர, கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி, தொடங்கி விட்டதாகவும் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது.
இதையடுத்து தற்போது கர்நாடகாவில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் வலியுறுத்தியிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக வருகிற வெள்ளிக்கிழமைக்குள் மத்திய அரசு பதிலிளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.