மகனின் எதிர்காலம் பாதிக்கும் என கதறிய இந்திய மருத்துவர்: மன்னிப்பு வழங்கியது ஆஸ்திரேலிய நீதிமன்றம்
மெல்போர்ன்: சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதற்காக, பணிநீக்கம் செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்ட இந்திய மருத்துவர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தைக் காரணம் காட்டி, ஆஸ்திரேலியாவிலேயே தங்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.
நோயாளியிடம் தகாத முறை :
சுஹைல் துரானி என்ற 36 வயதான இந்திய மருத்துவர், ராயல் பெர்த் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகக் கைது செய்யப்பட்டார்.
சிறையில் மருத்துவம் :
18 மாதம் காசுவரினா சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்த நோயாளிகளுக்கு மருத்துவம் செய்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையான அவரை, பெர்த் குடியேற்ற அனுமதி மையம் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, துரானி குடியேற்ற ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒரு மனு அளித்தார்.
மகனின் எதிர்காலம் பாதிக்கும் :
தனது குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருப்பதால், தன்னால் அவர்களைவிட்டு தனியே செல்ல முடியாது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய நான்கு வயது மகனின் எதிர்காலத்தை இந்த முடிவு மிகவும் பாதிக்கும் என்றும், அவர் கூறியிருந்தார். இதுமட்டுமில்லாமல், அவரது மனைவி பலாக்கும் தனது கணவர் தங்களை விட்டுச் சென்றால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அனுமதி நீட்டிப்பு :
துரானியின் மகனது எதிர்காலம் கருதியும், இனி அவர் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடமாட்டார் என்ற நம்பிக்கையிலும், அவருக்கு மன்னிப்பு வழங்குவதாக ஆணையம் அறிவித்து அவரது அனுமதியை நீட்டித்துள்ளது.












Click it and Unblock the Notifications