இன்று 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் ஜெயலலிதா
சென்னை: முதல்வர் பொறுப்புக்கு ஜெயலலிதா வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவேறுகிறது. காவிரிப் பிரச்சினையில் அவர் செயல்பட்ட விதம்தான் இந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
2011ம் ஆண்டு மே 16ம் தேதி அதிமுக ஆட்சி அமைந்தது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
இந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஏராளமான திட்டங்கள், ஏராளமான அறிவிப்புகளை அவரும் அவரது அரசும் வெளியிட்டுள்ளனர். ஆனால் தீர்க்க முடியாத பெரும் பிரச்சினையாக மின்வெட்டு நிலவுகிறது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் சில முக்கிய அம்சங்கள்...
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தது காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. தஞ்சைக்கு அழைத்து பட்டம் கொடுத்துபாராட்டு விழாவையும் அவர்கள் நடத்தினர்.
அம்மா மெஸ்
சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் என்ற மலிவு விலை உணவகங்கள், உடனடி ஹிட் ஆகி விட்டன. மிகப் பிரபலமாகி விட்ட இந்த கேன்டீன்கள் இப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
இலவச லேப்டாப்
மாணவர்களுக்கு இலவசலேப்டாப் திட்டமும் பிரபலமானது. இன்று நிறையப் பேரிடம் இந்த லேப்டாப் புழங்குகிறது.
20 கிலோ அரிசித் திட்டம்
அதேபோல ஏழைகளுக்கான 20 கிலோ அரிசித் திட்டமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மிக்ஸி - கிரைண்டர் திட்டம்
லேப்டாப் திட்டத்தைப் போல மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு திட்டங்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
சவால்கள்
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட சச்சரவுகளும், சவால்களும் வரத் தவறவில்லை. அதையும் அவர் சமாளித்தார்.
ரூ. 1500 கோடி சட்டசபையை கிடப்பில் போட்டார்
திமுகஆட்சிக்காலத்தில் ரூ. 1500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சட்டசபைக் கட்டடத்தை அப்படியே தூக்கி கிடப்பில் போட்டு விட்டது ஜெயலலிதா அரசு. இங்கு மருத்துவமனை அமைக்கப் போவதாக அரசு அறிவித்தது.
கமல்ஹாசனுக்கு வந்த பெரும் முட்டுக்கட்டை
அதேபோல நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் அரசுத் தரப்பிலிருந்து பெரும் நெருக்குதல்கள் வந்தன. படத்தையும் தடை செய்தனர். பின்னர் அப்பிரச்சினை சரியாகி படம் வெளியானது.
மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல்
ஜெயலலிதாவின் 2 வருட ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்குதான். மத்திய அரசும் ஜெயலலிதாவை மதிப்பது இல்லை. இதனால் இரு தரப்பும் எலியும், பூனையுமாகாவே போய்க் கொண்டுள்ளன.
தொடரும் மின்வெட்டு
கடந்த திமுக ஆட்சியில் சில மணி நேரமாக இருந்த மின்வெட்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பல மணி நேரமாக உயர்ந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை சரி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிரு்ப்பதாக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.
ராமதாஸ் மீதான அதிரடி
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் இன்னொரு அதிரடியாக பார்க்கப்படுவது டாக்டர் ராமதாஸ் மீதான நடவடிக்கை. ஒட்டுமொத்த பாமக தலைவர்களையும் அவர் அதிரடியாக கைது செய்தது தலித் வாக்கு வங்கிய கவரும் முயற்சி என்று அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
2014 லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக பெரும் அறுவடை செய்யும். அதை வைத்து டெல்லியில் புதிய அரசியல் சக்தியாக மாறும் நோக்கில் அம்மா செயல்படுவதாக கூறப்படுகிறது. பார்க்கலாம் ...