குற்றம்.. நடந்தது என்ன?: 6 மணிநேரம் பன்சாலை ’துருவித் துருவி’ விசாரித்த சிபிஐ
மகேஷ்குமார் என்ற ரயில்வே வாரிய உறுப்பினர், ரயில்வேயிலேயே கற்பக விருட்சமான மற்றொரு பதவிக்கு மாற ஆசைப்பட்டார். இதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகன் விஜய் சிங்லாவை அணுகி, ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சிங்லாவும் பதவி உங்களுக்குத் தான் என்று உறுதி கொடுத்துள்ளார்.
இதை நம்பிய மகேஷ்குமார் முன்தொகையாக ரூ.90 லட்சத்தை, இடைத்தரகர்கள் மூலம் கொடுத்துள்ளார். லஞ்சம் பெறும்பொழுது சிங்லா சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
மருமகன் லஞ்ச விவகாரத்தில் சிக்கியதால், தனது பதவியை ராஜினாமா செய்யுமளவிற்கு நெருக்கடிக்காளானார் பன்சால். இருந்தபோதும் பன்சாலுக்கும் லஞ்ச விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நேற்று அவரிடம் 6 மணிநேரம் விசாரணை நடந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையில், பன்சாலுக்கும் , மகேஷ்குமாருக்கும் இடையிலான சந்திப்புகள், தொலைபேசி உரையாடல்கள் குறித்து பல கேள்விகள் சிபிஐ தரப்பில் கேட்கப் பட்டதாக தெரிகிறது. ஆதாரங்களாக பன்சாலின் தொலைபேசி உரையாடல் பதிவுகள், செல்போன் அழைப்பு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சிபிஐ காட்டியதாம்.
ஆனால், தனக்கு இந்த லஞ்ச விவகாரம் குறித்து எதுவும் தெரியாது, மகேஷ்குமாரை ரயில்வே வாரிய உறுப்பினர் என்ற அளவில் அறிமுகம் மட்டுமே உண்டு என பன்சால் தெரிவித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.