உ.பி.: இது எங்க பெட்டி உள்ளே வராதே: 6 வாலிபர்களை ரயிலில் இருந்து கீழே வீசிய ராணுவ வீரர்கள்
லக்னோ: ரயில் கிளம்பிய அவசரத்தில் ராணுவ வீரர்களுக்கான பெட்டியில் தவறுதலாக ஏறிய 6 வாலிபர்களை ராணுவ வீரர்கள் கீழே தூக்கி வீசினர்.
அவாத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸில் ராணுவ வீரர்களுக்கு என்று ஒரு பெட்டி முன்பதிவு செய்யப்பட்டது. உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 340 கிமீ தொலைவில் உள்ள மொராதாபாத் அருகே 6 வாலிபர்கள் நேற்று இரவு ரயிலில் ஏறினார்கள். அவர்கள் ஏறும் முன்பு ரயில் கிளம்பத் துவங்கியதால் அவர்கள் அவசரத்தில் ராணுவ வீரர்களின் பெட்டியில் ஏறிவிட்டனர்.
தாங்கள் தவறான பெட்டியில் ஏறியதை அவர்கள் உணர்வதற்குள் ரயில் நிலையத்தை தாண்டி ரயில் சென்றுவிட்டது. உடனே அங்கு இருந்த ராணுவ வீரர்கள் இது தங்களுக்கான பெட்டி என்று கூறி அந்த 6 பேரையும் வெளியே போகுமாறு கூறியுள்ளனர். அடுத்த நிறுத்தம் வந்ததும் வேறு பெட்டிக்கு சென்றுவிடுகிறோம் என்று அந்த வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ராணுவ வீரர்களோ அந்த 6 வாலிபர்களையும் ரயிலில் இருந்து கீழே தூக்கி எறிந்துவிட்டனர். இதில் 5 பேர் காயம் அடைந்தனர். ஒருவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. வழக்கு போட்டால் மேலும் பிரச்சனை வருமோ என்று அடிபட்ட வாலிபர்கள் அஞ்சுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications