மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சல்களா? - விடிய விடிய தேடுதல் வேட்டை!
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தி வருகி்ன்றனர்.
தமிழகத்தில் தர்மபுரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் தங்கி பயிற்சி எடுப்பதும், அவர்களை போலீசார் தீவிரமாக தேடும் போது பதுங்கி கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வந்த மாவோயிஸ்டு முக்கிய தலைவர் பிடிபட்டார். இதில் சில மாவோயிஸ்டுகள் மட்டும் தப்பி சென்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் வழியாக தர்மபுரி, தேனி, மதுரை விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் ஊருடுருவி உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் சிறப்பு அதிரடி படை ஐஜி சங்கர்ஜூவால் உத்தரவி்ன் பேரில் சத்தியமங்கலம் முகாம் எஸ்பி கருப்பசாமி தலைமையிலான அதிரடிபடையினர் தர்மபுரி, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிபடையினரும் வனத்துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதே போல் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ராஜபாளையம் அதிரடி படை முகாமை சேர்ந்த சப்இன்ஸபெக்டர் அழகுதுரை தலைமையிலான போலீசாரும் வனத்துறையினரின் உதவியுடன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் அம்பை மலைப்பகுதி முதல் கன்னியாகுமரி மலை அடிவாரப்பகுதி வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.