தமிழக சுற்றுலா பயணி மீது கேரள வனத்துறையினர் தாக்குதல்... பாலருவி தற்காலிகமாக மூடல்
கேரள மாநிலத்தில் உள்ள பாலருவி தற்காலிகமாக மூடப்பட்டது.
நெல்லை: தமிழக சுற்றுலா பயணி மீது கேரள வனத்துறையினரும், வனக்குழுவினரும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாலருவி தற்காலிகமாக மூடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில்அமைந்துள்ள குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் வரத்து கொட்டுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த அருவிகளில் குளித்து முடிந்து சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள ஆரியங்காவு பாலருவி நோக்கி கார்,வேன் ,மற்றும் பஸ்களில் குளிக்க சென்று வந்தனர்.
இங்கு குளிப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.40 வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 30-ஆம் தேதி வனத்துறையினருக்கும் தமிழக சுற்றுலா பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கேரளா வனத்துறையினரும்,வனக்குழுவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக சுற்றுலாப் பயணியை தாறுமாறாக அடித்து உதைத்தனர். அங்கு குளிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு கேரளா வனத்துறை,வன பாதுகாப்பு குழுவினர் ஆகியோரின் செயலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவுப்படி பாலருவி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் இந்த அருவியில் உள்ளுறை சார்ந்தவர்களுக்கு பணி வழங்காமல் வெளியூர் நபர்களுக்கு பணி வழங்குவதாகவும், சுற்றுலாப் பயணிகளை தாக்கியதாகவும் வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கேரளா வனத்துறை இந்த அருவியை காலவரையின்றி மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து அருவி மூடப்பட்டது.












Click it and Unblock the Notifications