காவிரி..4 மாதங்களில் 134 டி.எம்.சி. நீர் தர இயலாது.. பகிர்வு அளவை திருத்த வேண்டும்: சித்தராமையா!
அனைத்துக் கட்சிக் கூட்டம்
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபை, சட்டமேலவை கட்சித் தலைவர்களின் கூட்டம் பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் எதியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்ட மேலவைக் கட்சித் தலைவர் எம்.சி.நானையா, பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஸ்ரீராமுலு, மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்வர் சித்தராமையா கூறுகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீர் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த 4 மாதங்களில் கர்நாடக விவசாயிகளுக்கு அத்தியாசியமாக தண்ணீர் தேவைப்படுவதால், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை உள்ளது. எனவே, 4 மாதங்களில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீர் பங்கை தர இயலாது. தண்ணீர் பங்கு அளவை திருத்தியமைக்குமாறு காவிரி மேற்பார்வைக் குழுவில் கர்நாடகம் சார்பில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் பகிர்வு அளவில் திருத்தம் தேவை
2007-ஆம் ஆண்டில் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் பகிர்வு அளவை திருத்தியமைக்க இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரின் அளவை திருத்தியமைக்க வருகிற 12-ந் தேதி டெல்லிய்ல் நடைபெற உள்ள காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி இறுதித் தீர்ப்புப்படி தமிழகத்துக்குத் தரவேண்டிய 134 டிஎம்சி தண்ணீரின் அளவை, 97.82 டிஎம்சி ஆகக் குறைக்க மேற்பார்வைக் குழுவில் முறையிட உள்ளோம்.
7 அம்சங்கள்
வரும் 12-ந் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில், காவிரி மேற்பார்வைக் குழுவின் செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டும். இறுதித் தீர்ப்பை பரிசீலிக்க வசதியாக, காவிரிப் படுகை அணைகளில் நீர் அளவு கணக்கிடும் மையங்களை அமைக்க வேண்டும். காவிரிப் படுகை அணைகளின் நீர் இருப்பை அறிந்து கொள்ள பொதுவான இருப்பு அட்டவணையை உருவாக்க வேண்டும். சாதாரண மற்றும் இடர்பாடு ஆண்டை அடையாளப்படுத்த வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழுவின் வழிகாட்டுதல்கள், விதிகளை வகுக்க வேண்டும்.
மொத்த நீர் தேவையில் குடிநீர்த் தேவையையும் சேர்ப்பதோடு, மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரில் இருந்து குடிநீரை விநியோகிக்க வேண்டும். காவிரிப் படுகை அணைகளில் தானியங்கி தண்ணீர் கணக்கிடும் கருவியைப் பொருத்த வேண்டும். கர்நாடகத்தின் காவிரி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த 7 அம்சங்களை விவாதிக்கப்பட்டு முன்வைக்கப்படும் என்றார் அவர்.