எகிப்தில் ராணுவ புரட்சி: வீட்டுச் சிறையில் அதிபர் மோர்சி- இடைக்கால அரசு நியமனம்
கெய்ரோ: எகிப்தில் ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மோர்சியை ராணுவம் அதிரடியாக நீக்கியுள்ளது. அவரை ராணுவம் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் முடக்கிவிட்ட ராணுவம், மூத்த நீதிபதி மன்சூரின் தலைமையில் இடைக்கால அரசையும் அமைத்துள்ளது.
துனீசியாவில் ஆரம்பித்த அரபு வசந்தம் பல அரேபிய நாடுகளுக்கும் பரவி நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர்களை பதம் பார்த்தது. அந்த வகையில் எகிப்து நாட்டின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்கும் மக்கள் போராட்டத்தால் பதவி விலக நரேந்தது.
இதையடுத்து அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. அதில், இஸ்லாமிய கட்சியான முகம்மது மோர்ஸி அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவரையும் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதிபரின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரமும் மூண்டது. இதில் பலர் பலியாயினர்.
தலைநகர் கெய்ரோவின் தகிரிர் ஸ்கொயர் பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தினந்தோறும் கூடி அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், இவர்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தினருக்கு அவர் விடுத்த உத்தரவை அவர்கள் ஏற்கவில்லை.
இந் நிலையில், மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது ராணுவம், இந்த கெடு நேற்றிரவு முடிந்த நிலையில் ராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது. அவரை பதவி விலக வைத்து, வீட்டுச் சிறையில் அடைத்தது.
இதையடுத்து அதிபர் பதவி விலகிவிட்டதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் இது ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு என மோர்சி அறிவித்துள்ளார். மேலும் எங்களிடமிருந்து மக்கள் புரட்சியை ராணுவம் பறித்துக் கொண்டுவிட்டது என்றும் மோர்சி தனது இணையத்தளத்தில் கூறியுள்ளார். அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்த சில நிமிடங்களில் அவரது இணையத்தளத்தையும் ராணுவம் முடக்கிவிட்டது.
மோரிசியின் மூத்த அமைச்சர்கள், ஆலோசகர்கள், அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்திய Muslim Brotherhood அமைப்பின் தலைவரான சாத் எல் கதானியையும் ராணுவம் கைது செய்துள்ளது.
மோர்சி பதவிக்கு வந்ததில் இருந்தே பிரச்சனை இருந்து வந்தது. அவர் கொடுத்த உறுதிமொழிகளை மீறிவிட்டு அவரும் அடக்குமுறை ஆட்சியையே நடத்தினார். மேலும் தொடர் போராட்டங்களால் எகிப்தின் பொருளாதாரமும் முடங்கிப் போனதால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடும், பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடும் தலைவிரித்து ஆடி வருகிறது.
இந்தக் காரணங்களால் மோர்சி மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந் நிலையில் நாட்டைக் காக்கவும் மக்களைக் காக்கவுமே மோர்சியை பதவியை விட்டு நீக்குவதாகவும், ஆட்சியைக் கைப்பற்ற விரும்பவில்லை என்றும், விரைவில் வெளிப்படையான தேர்தலை நடத்துவோம் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
ராணுவத்தின் இந்தச் செயலுக்கு முஸ்லீம் பிரதர்ஹுட் தவிர்த்த பிற முக்கிய இஸ்லாமிய, கிருஸ்துவ கட்சிகளும், நோபல் பரிசு வென்ற முன்னாள் சர்வதேச அணு சக்திக் கழக விஞ்ஞானி முகம்மத் எல் பாரடாய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா வருத்தம்..
ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வைப்பதில் முஸ்லீம் பிரதர்ஹுட் அமைப்பினருக்கு ரகசியமாக நிதி உதவி, அரசியல் உதவிகளைச் செய்த அமெரிக்கா, ராணுவத்தின் இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
விரைவில் அங்கு ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்று அதிபர் பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் மோர்சி பதவி நீக்கப்பட்டதை, ராணுவப் புரட்சி என்று ஒபாமா கூறவில்லை. இதன்மூலம் அமெரிக்காவின் 'ஆசிர்வாதம்' எகிப்து ராணுவத்துக்கு இருப்பதும் உறுதியாகிறது.
நாடு முழுவதும் ராணுவ கவச வாகனங்கள் சுற்றி வந்து கொண்டுள்ளன. முஸ்லீம் பிரதர்ஹுட் உள்ளிட்ட சில அமைப்புகளின் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டுவிட்டன. மோர்சிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஊழியர்களையும் ராணுவம் கைது செய்துள்ளனர்.
மோர்சியை பாதுகாக்க வேண்டிய அதிபரின் சிறப்பு கமாண்டோக்களும் ராணுவப் புரட்சிக்கு ஆதரவாக அதிபர் மாளிகையில் ஏறி பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.