ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாள் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மூலம் கலைஞர் டிவியும் ஆதாயம் அடைந்தது என்பது சிபிஐ வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் பங்குதாரரான தயாளு அம்மாளை ஒரு முக்கிய சாட்சியமாக சிபிஐ சேர்த்துள்ளது. இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தமக்கு உடல்நலக் குறைவு உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் மனுத்தாக்கல் செய்தார். இதை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் மறுத்ததுடன் உச்சநீதிமன்றத்தில் முறையிட அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று உச்சநீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் ஒதுகீட்டு வழக்குகளை கண்காணித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் இம்மனுவை ஏற்று நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டுள்ளது.