13வது அரசியல் திருத்தம்: இந்தியாவின் கருத்தை நிராகரித்த இலங்கை!
இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்றிருந்ந்தார் சிவசங்கர் மேனன். அவர் நேற்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.
சிவ்சங்கர் மேனன் சொன்னது என்ன?
இச்சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர் அமைப்பினரும் சந்தித்துப் பேசி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வடக்கு மாகாண சபை தேர்தல், நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்றும் இந்திய தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. மேலும் இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைவரும் சம உரிமையுடன் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், சமநீதி பெற்றும் வாழ வேண்டும். 13வது அரசியல் திருத்தத்துக்கும் அப்பால் கூடுதல் உரிமைகள் அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இலங்கையில் போருக்குப் பின் இந்தியா உதவியுடன் நடைபெற்று வரும் மறுகுடியமர்வுப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் கருத்தை நிராகரித்த இலங்கை
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சாசனத்தின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொதுக் கருத்தை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிவசங்கர் மேனனிடம் மகிந்த ராஜபக்சே விவரித்தார்
மேலும் இலங்கை போன்ற சிறியதொரு நாட்டில் மாகாண சபைகளுக்கு நிலம் மற்றும் போலீஸ் அதிகாரங்களை வழங்குவதால் எழக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் ராஜபக்சே எடுத்துக் கூறினார். இதனால் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் முறையானது நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமானதாகவும் ஏற்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது 13வது அரசியல் திருத்தத்துக்கும் அப்பால் கூடுதலாக உரிமை வழங்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வலியுறுத்திய கருத்தை மகிந்த ராஜபக்சே நிராகரித்துவிட்டார் என்பதையே இலங்கை அரசு சுட்டிக்காட்டுகிறது.