வருது ஆகஸ்ட் மாதம்.. நடுக் கடல் கோயிலில் நடந்து போய் சாமி கும்பிட தயாராகும் பக்தர்கள்!
பாவ்நகர்: கோயிலை தரையில பார்த்து இருப்பீங்க! மலையில பார்த்து இருப்பீங்க! கடற்கரை ஓரத்துல பார்த்திருப்பீங்க ஆனா... கடலுக்குள்ளேயே போய் சாமி கும்பிடுவதை பார்த்திருக்கீங்களா? இல்லைதானே.. ஆனா அப்படி ஒரு கோயிலும் இருக்குதுங்க..
என்னது. நடுக்கடலில் கோயில்.. அதுவும் நடந்து போய் சாமி கும்பிடுவதா? என்னங்க கதைவிடுகிறீர்களா? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.. ஆனால் நித்தம் நித்தம் அதிசயம்னு சொல்லும் வகையில் நாள்தோறும் "கடல்கோயிலை" நடந்து போய் தரிசிக்கின்றனர் ஆயிரமாயிரம் பக்தர்கள்..
அதுவும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம்தான்.. கடல் முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.. லட்சக்கணக்கான மக்கள் நடுக்கடலில் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்வர்.. அதுவும் நடுக்கடலில் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்று சாமி கும்பிடுவார்கள்.. இது கடலா?மனிதர்கள் அலையா? என்று திடுக்கிட வைக்கும் இடம் இருக்கிறது.. ஆகஸ்ட் மாதம் வருகிறது அல்லவா இப்போதே ரெடியாகிக் கொண்டிருக்கிறது கடல் கோயில்.
எங்கே இருக்கிறது?
இந்துக்களுக்கும் ஜைன மதத்தினருக்கும் வழிபாட்டுக்குரிய ஏராளமான ஆலயங்கள் இருப்பது குஜராத் மாநிலத்தில்தான்.. குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற இடத்தில்தான் இந்த கடல் கோயில் இருக்கிறது..
அரபிக் கடல் அதிசயம்
பாவ்நகர்....எளிதில் சென்றடையும் வகையில் ரயில் மற்றும் விமான போக்குவரத்து உண்டு. பாவ்நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோலியாக். இந்த சிறு கிராமத்தை தாலாட்டுகிறது அரபிக் கடல்..
கடலுக்குள் நடப்பது எப்படி?
இந்த கடற்பரப்பு நாள்தோறும் உள்வாங்கக் கூடியது. பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக் கூடியது. ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். கடல் உள்வாங்க நாமும் அப்படியே நடந்து போகலாம்
நடுக்கடல் எப்படி இருக்கும்?
கடலில் நான்குசக்கர வாகனங்கள் கூட செல்லும் வகையில் மண்வாகு இருக்கும். அதனால் நடப்பது எளிதாக இருக்கும். நம்மூர் கடல் போல பயந்து பயந்து போக வேண்டியதிருக்காது. அதனால்தான் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் அத்தனை லட்சம் பேர் திரண்டு விடுகிறார்கள்..
என்ன சாமி இருக்கிறது?
நடுக்கடலில் ஒருகாலத்தில் சிவன் கோயில் இருந்துள்ளது. அந்த கோயிலில் சிதிலமடைந்து போயுள்ளது. தற்போது ஐந்து சிவலிங்கங்களும் நந்தியும் இருக்கிறது. கடலுக்குள் மூழ்கியே இருக்கும் இந்த கோயில் கடல் உள்வாங்கும்போது மட்டுமே வெளியே தெரியும். கடல் உள்வாங்க மக்களும் அதை பாலோ செய்து அப்படியே காலாற கடலில் நடந்து போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கடல் மீண்டும் வெளியே வருவதற்குள் ஓடி வந்துவிடுகிறார்கள்...இப்படித்தான் தினமும் நடக்குதுங்க.. குறிப்பாக ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் பாவ்நகர் மாவட்ட நிர்வாகமே சிறப்பான ஏற்பாடை செய்து கொடுக்கிறது.