குஜராத் கலவரத்தால் பிறந்தது தான் இந்தியன் முஜாஹிதீன்.. காங். தலைவர் பேச்சுக்கு பாஜக கண்டனம்
டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் விளைவுதான் இந்தியன் முஜாஹிதீனின் பிறப்புக்குக் காரணம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியிருப்பதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியும் ஷகீல் அகமதுவின் இந்தக் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் ஷகீல் அகமது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு குறித்து டிவிட்டரில் தெரிவித்திருந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது டிவிட்டில், குஜராத் கலவரத்திற்குப் பின்னர்தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதை தேசிய புலனாய்வு அமைப்பே தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கபப்ட்டது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா செளத்ரி கூறுகையில், ஷகீல் அகமது சொல்லியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஷகீல் அகமதுவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறஉகையில், அரசியலை மதவாதமாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டு செயல்படுகிறது. தேசிய பாதுகாப்பை புறம் தள்ளி விட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தனது தலைவர்களைப் பேச விட்டு அது வேடிக்கை பார்க்கிறது.
இந்தியாவில் நிலவி வரும் தீவிரவாதத்தின் பின்னணியில் பாகிஸ்தான்தான் உள்ளது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் குஜராத் கலவரத்துடன் அதை இணைக்க பார்க்கிறது காங்கிரஸ். இது மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்றார் அவர்.
அருண் ஜேட்லி கண்டனம்
பாஜக ராஜ்யசபா கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது ஆட்சி நிர்வாக நெருக்கடி, சரியான தலைமை இல்லாதது ஆகிய இரண்டு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. எனவே, அவர்களுக்கு தேர்தலைச் சந்திக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு மதச்சாயம் பூசுவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதன்மூலம் தேர்தலுக்கான உண்மையான செயல்திட்டத்தை மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆட்சியை விட்டு அகற்ற நினைக்கும் அனைவரும் தாங்கள் நிர்வாக ரீதியிலான பிரச்னைகளையே வாக்களிக்கும்போது மனதில் கொள்ள வேண்டும்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு குறித்து ஷகீல் அகமது தெரிவித்துள்ள கருத்து மூலம், அவர் வரலாற்றை மாற்றி எழுத முயன்றுள்ளார். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் அமைப்புதான் அது என்பது போல் காட்ட அவர் முனைந்துள்ளார்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் சதி செய்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்புப் பிரச்னையை மதவாதமாக மாற்றும் மற்றொரு முயற்சி இது. காங்கிரஸின் மதவாதச் செயல்திட்டத்துக்கு உதாரணமாக, நரேந்திர மோடியைச் சாடுவது, இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ கையாளும் விதம், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு உருவானது குறித்து ஷகீல் அகமது தெரிவித்த கருத்து ஆகிய மூன்று விஷயங்களைக் கூறலாம் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
இதேபோல ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் கூறுகையில், இந்தியன் முகாஜிதீனின் பயங்கரவாதிகளின் செய்தித் தொடர்பாளர் போல் ஷகீல் அகமது செயல்படுகிறார். அவரைப் போன்ற அனுதாபிகளால்தான் இந்தியாவில் பயங்கரவாதம் அதிகரிக்கிறது.
பயங்கரவாதத்துக்கு ஷகீல் அகமது நியாயம் கற்பிப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் பாணிதான் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்று அவர் சாடியுள்ளார்.