முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து கேரளா அரசும் வழக்கு தொடர்ந்தது. இதில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்த போதும் இதை பின்பற்றாமல் இருக்க தனிச்சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. ஆர்.எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகள் எச்.எல்.தட்டூ, மதன்.பி.லோகூர், எம்.ஒய்.இக்பால், சந்திரமெளலி குமார் பிரசாத் ஆகியோர் இன்று இந்த வழக்கை விசாரித்தனர்.
தமிழகத்துக்கு உரிமை உண்டா?
அப்போது, 1886 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் இந்திய அரசு இடையேதானே ஒப்பந்தம் போடப்பட்டது. அப்படியானால் தமிழகம் எப்படி முல்லைப் பெரியாறு அணையில் உரிமை கோர முடியும் என்று 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது. மேலும் தமிழக அரசு சரியான புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினர்.
உரிமை உண்டு- தமிழக அரசு
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு ஆறு தமிழகத்தின் வழியே ஓடுகிறது. 1935ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிட்டார்.
அணைக்கு பாதிப்பு- புதிய அணை அவசியம்
கேரள அரசு தரப்போ, நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று வாதிட்டது.
புதிய அணை அவசியம் இல்லை- தமிழக அரசு
ஆனால் தமிழக அரசு தரப்பில் நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடரும் என்று ஐவர் பெஞ்ச் ஒத்திவைத்தது.