வடசென்னை கச்சா எண்ணெய் கசிவு: நிறுவனங்கள் மீது நடவடிக்கை உறுதி... வீரப்ப மொய்லி
சென்னை: வடசென்னை பகுதியில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வீரப்பமொய்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
வடசென்னை பகுதிகளில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது ஆகும். இந்த பிரச்சினை தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பிரச்சினை தற்போது தான் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
காஷ்மீர் டூ கன்னியாகுமரி
பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் நமது நாட்டின் பணவீக்கம் ஒரு நிலையுடன் இல்லாமல் ஏற்றத்தாழ்வுடன் உள்ளது. பணவீக்கம் நிலையாக இருந்தபோது ரூ.9 வரை விலை குறைத்து உள்ளோம்.
நமது நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரே கட்டணத்துடன் இல்லாமல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. கட்டணம் ஒரே நிலையுடன் இருக்க முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பிரதமரின் ஆலோசகருமான ரங்கராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தனது விசாரணையை முடித்துக்கொண்டு அறிக்கையை தந்து உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து நாடு முழுவதும் ஒரே கட்டணம் என்ற திட்டம் அமல்படுத்தப்படும் இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.
மேலும் பாஜக ஏற்படுத்தியுள்ள பிரச்சார குழு பற்றி பேசிய மொய்லி, பாரதீய ஜனதா கட்சியில் ஒருவருக்கு ஒருவர் இடையே போட்டி பொறாமையில் உள்ளனர். இதை மறைக்க பிரசார குழுக்களை ஏற்படுத்தி உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.