ஸ்பெக்ட்ரம் வழக்கு: நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அனில் அம்பானிக்கு விலக்கு!
ரிலையன்ஸ் குழுமத்தின் ஸ்வான் டெலிகாம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற தகுதியற்ற நிறுவனம்.. ஆனால் முறைகேடாக அலைக்கற்றை பெற்றது என்பது சிபிஐயின் புகார். இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நாளைக்குள் சாட்சியமளிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கூறி சம்மனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அனில் அம்பானியும் டினாவும் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு திங்கள்கிழமையே தாக்கல் செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து விசாரணை
ஒத்திவைக்கப்பட்டது. இன்று வரும் திங்கள்கிழமை மனு மீது விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி அனில் அம்பானியும் டினாவும் சாட்சியமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை நீதிமன்றத்தில் அனில் அம்பானி சார்பில் இன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமக்கு முன்பே திட்டமிடப்பட்ட பணிகள் இருப்பதால் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பின் எந்த தேதியும் தாம் சாட்சியமளிக்க வருகிறேன் என்று கேட்டுக் கொண்டார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 2-வது வாரம் வரை அனில் அம்பானி, டினா அம்பானி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு அளித்தது. இதனால் அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை.