ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து... 35 பேர் பலி
சான்டியாகோ டி காம்போஸ்டெலா: ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியானார்கள்.
இந்த கோரவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வடக்கு ஸ்பெயின் நகரான சான்டியாக டி காம்போஸ்டெலா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. ஸ்பெயின் நாட்டில் நடந்த மிகப் பெரிய விபத்துக்கள் வரிசையில்இது சேர்ந்துள்ளது.
தடம் புரண்ட பெட்டிகள் பலவற்றில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது. இதுவே உயிரிழப்பு அதிகமாக காரணம். இந்த நகரில் நடந்த கிறிஸ்தவ திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ரயில்களில் வந்தவண்ணம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் கவிழ்ந்து விழுந்த வேகத்தில் பலர் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் பெட்டிகளுக்குக் கீழே போய் மாட்டிக் கொண்டனர்.
ரயில் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக விபத்தில் சிக்கி மீண்ட ஒருவர் கூறினார்.
இந்த நகரம்தான் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜோய் பிறந்த ஊராகும் என்பது குறிப்பிடத்தக்கது.