ஈரோடு 'கறுப்பு ஜூலை' கருத்தரங்கம்… திருமாவளவனுக்கு தடை
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடைபெற இருந்த கறுப்பு ஜூலை என்ற கருத்தரங்கில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த இன படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 25ல் கறுப்பு ஜூலை என்ற பெயரில் கருத்தரங்கு ஈரோட்டில் நடப்பதாக இருந்தது.
ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த இந்த கருத்தரங்கு நடப்பதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வினாயக மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வந்தனர்.
இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கருத்தரங்கம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
இது பற்றி ஈரோடு டவுன் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா அளித்து உள்ள அனுமதி மறுப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை இன படுகொலையை கண்டித்து நடக்கும் கறுப்பு ஜூலை கருத்தரங்கில் இன கலவரத்தை தூண்டும் வகையில் பேசி சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் கோவை, நீலகிரி, மாவட்டங்களில் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் வாகனங்களில் வரும் போது அசம்பாவித சம்பவம் ஏற்படவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கருத்தரங்குக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அனுமதி மறுப்பை மீறி கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.