தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
சென்னை: தெலுங்கானாவை தனி மாநிலமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டம் நடப்பதால் தமிழகம்-ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவை தனி மாநிலமாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத், நெல்லூர், விஜயவாடா, கர்ணூல், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி, திருமலைக்கு தினமும் பேருந்துகள் விடப்படுகின்றன. ஆனால் ஆந்திராவில் தற்போது நிலவும் பதட்டமான சூழலால் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்போது இயக்கப்படவில்லை. சித்தூர், திருப்பதி, கடப்பா ஆகிய பகுதிகளுக்கு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து சேவை நிறுத்தத்தால் ஆந்திரா செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.