ஆடிப்பெருக்கு விழா: கரைபுரண்டு ஓடும் காவிரியால் மக்கள் உற்சாகம்
திருச்சி: தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருமணமான பெண்கள் புதுத் தாலி கயிறு மாற்றியும், திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டி மஞ்சள் கயிற்றை அம்மனை வேண்டி கட்டிக் கொண்டு வழிபட்டனர்.
இந்த ஆண்டு பருவமழை சரியான நேரத்தில் பெய்துள்ளதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரிக் கரையோர மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கு திருநாளை கொண்டாடினர்.
இதேப்போல, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆறுகளில் நீராடியும், ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்
ஆடிப்பெருக்கு
ஆடிமாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், திருமணமானவர்கள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விடுவதும், திருமணமான பெண்கள் புதுத் தாலி கயிறு மாற்றியும், திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டி மஞ்சள் கயிற்றை அம்மனை வேண்டி கட்டிக் கொள்வதும் வழக்கம்.
கடல்தேடிச் செல்லும் காவிரி
காவிரி என்னும் பருவப்பெண் கடல்ராஜன் தேடி பொங்கி பிரவாகமாக செல்லும் தினம் ஆடிப்பெருக்கு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாப்படுகிறது. கடலைத் தேடிச் செல்லும் காவிரி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் எல்லாவித நலங்களையும், வளங்களையும் அளித்து செல்கிறாள்.
மங்கல வழிபாடு
மகிழ்ச்சி பொங்க ஓடி வரும் காவிரி தாய்க்கு மஞ்சள், குங்குமம், பூ, பழம், சந்தனம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கல பொருட்களை கொடுத்து பூஜை செய்வது வழக்கம்.
மஞ்சள் கயிறு
மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டு காவிரி அன்னையை ஆடிப் பெருக்கு தினத்தில் வணங்கினால் எல்லா வித செல்வங்களும் பெரும் என்பது நம்பிக்கை. இதனால் பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டி காவிரி தாயை வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கரை புரண்டு ஓடிய காவிரி தாய்
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இரு கரைகளையும் தழுவியபடி காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், அம்மா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே கூடி , காவிரி தாய்க்கு பூஜை செய்தனர்.
புதுமண தம்பதியினர்
புதுமண தம்பதிகள் தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, வாழ்க்கை செழிக்க காவிரி தாயை வணங்கி செல்கின்றனர். மஞ்சள் கயிறை கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு கட்டிவிட்டனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக காவிரி நதி கருதப்படுகிறது. இதனால், ஆடிப்பெருக்கின்போது காவிரிக்கு ரங்கநாதர் சீர்கொடுப்பது வழக்கம். இன்று காலை கோயிலில் இருந்து பட்டுப்புடவை, திருமாங்கல்யம், பழங்கள், பூ ஆகியவற்றை யானை மீது வைத்து மேளதாளத்துடன் அம்மா மண்டபம் எடுத்து வந்தனர். படித்துறையில் பூஜை செய்து, சீர்பொருட்களை நடுஆற்றில் கொண்டு போய் விட்டனர்.
சாமி தரிசனம்
தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்பமண்டப படித்துறையிலும் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இங்கு புனித நீராடிய பக்தர்கள், ஐயாறப்பர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் காவிரி நீர் வராததால் மக்கள் வீடுகளிலேயே புனித நீராடி பூஜை செய்தனர். பூம்புகாரில் ஏராளமானோர் கடலில் புனித நீராடினர்.
பவானியில் உற்சாகம்
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் நேற்றிரவே கோயிலுக்கு வந்து தங்கினர். இன்று காலை காவிரியில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.