டிஜிபியைக் கூடவா உங்களுக்கு அடையாளம் தெரியாது... பிரதமருக்கு ஜெ. காட்டமான கடிதம்

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பெல் நிறுவன பாய்லர் திறப்பு விழாவுக்காக கடந்த 2-ந் தேதி நீங்கள் திருச்சி வந்தீர்கள். உங்களை வரவேற்க தமிழக நிதி அமைச்சர், போக்குவரத்து அமைச்சர், கதர் கிராம தொழில் துறை அமைச்சர், தமிழ்நாடு தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., திருச்சி மாவட்ட கலெக்டர் ஆகியோரை ஏற்பாடு செய்திருந்தேன்.
திருச்சி விமானநிலையத்தில் அவர்கள் உங்களை வரவேற்றார்கள். அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் படிகட்டு அருகே உங்களை வரவேற்க எங்கள் அமைச்சர்களுடன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. வந்தபோது உங்களின் சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் கடுமையாக நடந்து அவரை தடுத்துள்ளனர். அதுவும் கீழ்நிலை அதிகாரிகள் அந்தஸ்து கொண்ட அவர்கள் டி.ஜி.பி.யை தடுத்து அவமரியாதையாக செயல்பட்டுள்ளனர்.
இத்தனைக்கும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. உங்களுக்கு பாதுகாப்பு பணியிலும் இருந்தவராவார். அவர் சீருடை யில் இருந்த நிலையில்தான் இந்த செயல் நடந்திருக்கிறது.
உங்களை விமான நிலையத்தில் யார்-யார் வரவேற்க வருவார்கள் என்று ஏற்கனவே நான் தகவல் அனுப்பியிருந்தேன். அதில் போலீஸ் டி.ஜி.பி.யின் பெயரும் இருந்தது. அதை உறுதிசெய்து உங்கள் அலுவலகத்தில் இருந்தும் ஆகஸ்ட் 1-ந் தேதி கடிதம் வந்தது.
இந்த நேரத்தில் இதுபோன்ற மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. பிரதமர் அலுவலகம் உறுதி செய்யப்பட்ட பட்டியலில் டி.ஜி.பி. இருந்தும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை தடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு டி.ஜி.பி.யைகூட அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் இருந்தார்களா? என்று நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழகத்தின் முதன்மை போலீஸ் அதிகாரியை அதுவும் சீருடையில் இருந்த நிலையிலும் அடையாளம் கண்டுகொள்ளாமல் போனது ஏனென்று தெரியவில்லை. இந்த அதிகாரிதான் உங்கள் தமிழ்நாடு சுற்றுபயணத்துக்கு அனைத்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தவர் என்பதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற இடங்களில் பொருத்தமான அதிகாரிகளை நியமித்து இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications